
Rebecca
Feb 15, 2026
உள்ளூர்
மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு வலுக்கும் எதிர்ப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக 13.56 சதவீதத்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான இலங்கை மின்சார சபையின் யோசனைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நிலக்கரி மோசடியால் ஏற்பட்ட நஷ்டத்தையும் மின்சாரக் கட்டணம் ஊடாக ஈடுசெய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வருடத்திற்கு நான்கு முறை மேற்கொள்ளப்படும் மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு அமைய, 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்காக 11.57 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்பை இலங்கை மின்சார சபை முன்மொழிந்த போதிலும், அதற்குப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை.
உரிய காலத்தில் முறையான கட்டணத் திருத்த யோசனையை சமர்ப்பிக்காமை தொடர்பில் கவனம் செலுத்தி, கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளாதிருக்க ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.
அத்துடன், 2026 இரண்டாம் காலாண்டுக்கான கட்டணத் திருத்த யோசனையை பெப்ரவரி 13 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அவர்கள் மின்சார சபைக்கு அறிவித்திருந்தனர்.
அதற்கமைய, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்காக 13.56 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்பைக் கோரி, இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளது.
இது எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குரியதாகும்.
குறித்த யோசனையை மீளாய்வு செய்த பின்னர், அது குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கோர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதன் பின்னர் கட்டணத் திருத்தம் தொடர்பான தமது தீர்மானத்தை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






