Search

Rebecca

Dec 17, 2025

உள்ளூர்

இலங்கைக்கு ஜப்பான் 2.5 மில்லியன் டொலர் அவசர நிதியுதவி

கடந்த நவம்பர் மாத இறுதியில் இலங்கையைத் தாக்கிய சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, நாட்டிற்கு 2.5 மில்லியன் டொலர் அவசர நிதியுதவியை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி நேற்று தெரிவித்தார்.

இந்த நிதியுதவியானது சர்வதேச உதவி முகவர் நிலையங்கள் ஊடாக உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளை உள்ளடக்கிய மனிதாபிமான உதவிகளை வழங்கப் பயன்படுத்தப்படும்.

தீவு முழுவதும் சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கினால் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, பரவலான சேதங்களும் இடம்பெயர்வுகளும் ஏற்பட்டுள்ளன.

செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய மொடேகி, “எமது நீண்டகால நண்பரான இலங்கைக்கு”, பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவான மீட்சி மற்றும் புனரமைப்புப் பணிகளை உறுதி செய்வதற்காக ஜப்பான் தொடர்ந்து “தடையற்ற ஆதரவை” வழங்கும் என்று கூறினார்.

சுமார் இரண்டு வார காலப்பகுதியில் 1,250 மருத்துவ சிகிச்சைகளை வழங்கிய பின்னர், ஜப்பானிய பேரிடர் நிவாரண மருத்துவக் குழு நேற்று அதிகாலை இலங்கையிலிருந்து நாடு திரும்பியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All