Search

admin

Jul 12, 2026

உள்ளூர்

கட்டாய உழைப்பில் தயாரித்த பொருட்களுக்கு இலங்கையில் தடை!

கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதன்படி, ஜூலை 10 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அகழ்ந்தெடுக்கப்படும், உற்பத்தி செய்யப்படும் அல்லது முடிக்கப்படும் எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. 

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்களைக் கருத்தில் கொண்டு, இந்த ஒழுங்குவிதிகள் எந்தெந்தப் பொருட்கள் அல்லது நாடுகளுக்குப் பொருந்தும் என்பதை அவ்வப்போது அமைச்சர் அறிவிப்பார் என குறித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, ஒரு நாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும்போது, அவை கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களைச் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். 

கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடுக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தால், இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் யோசனை முன்வைத்திருந்தார். 

இதன்போது, இலங்கைக்கான பொருட்களுக்கு 12.5 சதவீத மேலதிக வரியை விதிக்க அமெரிக்க நிர்வாகம் பரிந்துரைத்திருந்தது. 

கட்டாய உழைப்பினால் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதற்கும், அந்தச் சட்டங்களைச் வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்கும் போதிய நடவடிக்கைகளை எடுக்காததால் இந்த வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. 

எவ்வாறாயினும், அரசாங்கம் தற்போது வெளியிட்டுள்ள புதிய ஒழுங்குவிதியின் பிரகாரம், இனிவரும் காலங்களில் கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் அல்லது முடிக்கப்படும் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All