Search

admin

Jun 29, 2026

உள்ளூர்

பௌதிக வளர்ச்சி மட்டுமல்ல... கலாசார வளர்ச்சியும் அவசியம்!

பௌதிக வளங்களை மேம்படுத்துவதன் மூலம் மாத்திரமன்றி, ஒவ்வொரு பிரஜையின் இதயங்களிலும் சுதேசியத்துவம், விழுமியங்கள் மற்றும் கலாசாரப் பிணைப்புகளைக் கட்டியெழுப்பிப் பலப்படுத்துவதன் மூலமே ஒரு நாட்டின் உண்மையான அபிவிருத்தி சாத்தியமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

திவுலப்பிட்டிய பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த "அநுபுத்தாபி வந்தனா" பொசன் மகா பெரஹர அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக ஜூன் 28 ஆம் திகதி கலந்துகொண்டபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

மிஹிந்து மகா ரஹத் தேரரின் இலங்கை வருகையுடன், இலங்கையர்களுக்கு உன்னதமான சத்தர்மம் மட்டுமன்றி, உயர்ந்த கலாசார விழுமியங்கள், மனித நேயப் பண்புகள் மற்றும் தசராஜ தர்மத்தினால் போஷிக்கப்பட்ட அரச ஆட்சி முறைமை ஆகியன உரித்தானது. எமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த தர்ம ஒளியினால், அற்புதமான நீர்ப்பாசனத் தொழில்நுட்பம், விண்ணைத் தொடும் மகா தூபிகள் ஊடாகச் சிங்களவர்களின் படைப்பாற்றல் திறமையை உலகிற்கே பறைசாற்ற முடிந்திருக்கின்றது.

உலகின் வேறெந்த நாட்டிலும் காண முடியாத, எமது பிரதான கலாசாரத் திருவிழாவான ஸ்ரீ தலதா பெரஹரவிற்கு இணையாக நடத்தப்படும் 'அநுபுத்தாபி வந்தனா' பொசன் மகா பெரஹர போன்ற நிகழ்வுகள், நாட்டிற்குத் தேவையான உண்மையான அபிவிருத்தியை எட்டுவதற்குப் பெரும் பக்கபலமாக அமைகின்றன.

நமது நாட்டின் பெருமைமிக்க பெரஹர கலாசாரத்தை வெளிப்படுத்தும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம், பிறரை மதிக்கும், சகோதரத்துவத்துடன் கூடிய, பொது நோக்கங்களுக்காகக் கூட்டு உணர்வுடன் ஒன்றிணைந்து செயற்படும் ஒரு எதிர்காலச் சந்ததியை நாட்டில் உருவாக்க வழி பிறக்கும் என பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த, தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய விஜேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ஹேமமாலி வீரசேகர, திவுலப்பிட்டிய பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவான பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All