Search

admin

May 31, 2026

உள்ளூர்

தேசிய மின்கட்டமைப்பில் இணையும் புதிய 60 மெகாவாட் மின்சாரம்!

இலங்கையின் முதலாவது வர்த்தக ரீதியிலான மின்கல எரிசக்தி சேமிப்பு கட்டமைப்பு திட்டத்தின் கீழ், மேலும் 6 மின்கல சேமிப்பு கட்டமைப்புகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மொத்தமாக 160 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், புதிதாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள கட்டமைப்புகள் மஹவ, வவுனியா, சுன்னாகம், கிளிநொச்சி, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களுக்கு அருகில் நிறுவப்படவுள்ளன.

இந்த ஒவ்வொரு கட்டமைப்பும் பகல் வேளையில் 40 மெகாவாட் வரையான மின்சாரத்தை சேமித்து வைக்கும் திறன் கொண்டவையாகும்.

இரவு வேளையில் மின்சாரத்திற்கான தேவை உச்சமடையும் சந்தர்ப்பங்களில் இந்த அமைப்புகள் மூலம் தலா 10 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியும்.

இதன்படி, புதிய 6 கட்டமைப்புகள் மூலமும் மொத்தம் 60 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பிற்கு வழங்கப்படவுள்ளது.

இத்திட்டமானது 40 பில்லியன் ரூபாவிற்கும் அதிக முதலீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை அதிகரிப்பதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை விரிவுபடுத்தவும், நுகர்வோருக்கு குறைந்த செலவில் மின்சாரத்தை வழங்கவும் வழிவகுக்கும்.

தற்போது எரிபொருளைப் பயன்படுத்தி ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சுமார் 115 ரூபா செலவாகிறது. எனினும், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இந்தச் செலவை 30 ரூபாவாகக் குறைக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் மூலமான மின் உற்பத்திக்காக மாதாந்தம் செலவிடப்படும் வெளிநாட்டு அந்நியச் செலாவணியில், சுமார் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தத் திட்டத்தின் மூலம் சேமிக்க முடியும் என வலுசக்திஅமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All