Search

admin

May 19, 2026

உள்ளூர்

பருவமழை நோய் அபாயத்தை அதிகரிக்கிறது – சுகாதார நிபுணர்கள்

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள சிறியளவிலான வெள்ள நீர் வடிந்தோடத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்வரும் வாரங்களில் நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பில் சிரேஷ்ட ஆலோசகர் மருத்துவ நிபுணர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம கருத்துத் தெரிவிக்கையில்,

வெள்ளப்பெருக்கின் பின்னர் நீர்நிலைகள் மாசுபடுவதன் காரணமாக டெங்கு, எலிக்காய்ச்சல் , மஞ்சள்காமாலை, மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

"மழைக்காலத்தின் ஆரம்பமானது பல தீவிரமான நோய்களின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இக்காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் ஒரு முக்கிய அச்சுறுத்தலாகக் காணப்படுகின்றது" என அவர் தெரிவித்துள்ளார்.

சிறியளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில்கூட, பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் மூலம் வெள்ள நீர் மாசுபடக்கூடும் என்பதால், எலிக்காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பருவமழைக் காலத்தில் குடிநீர் ஆதாரங்கள் மாசுபடுவதால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் விபரித்துள்ளார்.

"இந்த நோய்களின் தாக்கங்கள் உடனடியாகத் தெரியாவிட்டாலும், வெள்ள நீர் வடிந்தோடுவதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு வாரங்களில் இவை வெளிப்படக்கூடும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.





Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All