
SEGU
Apr 11, 2026
உள்ளூர்
மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

மாலைத்தீவு ஜனாதிபதி Mohamed Muizzu அடுத்த மாதம் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் மற்றும் கடற்றொழில் துறையிலான புதிய முதலீடுகள் குறித்து, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான மாலைத்தீவு உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
மாலைத்தீவு ஜனாதிபதியின் இந்த விஜயத்திற்கு இணையாக, இரு நாடுகளினதும் கடற்றொழில் துறைகளுக்கு இடையே ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளினதும் கடற்றொழில் துறை சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், மாலைத்தீவின் புதிய மீன் வளங்களையும் இலங்கையின் வளர்ச்சியடைந்த தகரத்திலடைக்கப்பட்ட மீன் (Canned Fish) கைத்தொழிலையும் ஒன்றிணைத்து, புதிய உற்பத்திகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துச் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக மாலைத்தீவுச் சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கைக்குள் மீன் பதப்படுத்துதல் (Processing) மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட மீன் உற்பத்திகளைத் தயாரிப்பது தொடர்பில் இரு தரப்பினரும் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர்.
தற்போது "Made in Sri Lanka" முத்திரையுடன் கூடிய சில உற்பத்திகள் டுபாய் சந்தை ஊடாக மாலைத்தீவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறான உற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக இலங்கையிலிருந்து மாலைத்தீவிற்குப் பெற்றுக்கொள்வதற்கான முறையொன்றை வகுப்பது குறித்தும் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





