Search

Rebecca

Feb 10, 2026

உள்ளூர்

பொகவந்தலாவை பகுதியில் சிறுத்தையின் உடல் மீட்பு

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பிரிவில், தேயிலை மரமொன்றில் வைக்கப்பட்டிருந்த கம்பிப் பொறியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேயிலைத் தோட்டப் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவதால், தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்கள் மற்றும் கறவை மாடுகளை அவை வேட்டையாடுவதைத் தடுக்கவே இந்தப் பொறி வைக்கப்பட்டிருக்கலாம் என வனஜீவராசிகள் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நேற்று (09) இரவு இந்தப் பொறியில் சிறுத்தை சிக்கியிருக்கலாம் என்றும், அதிலிருந்து தப்பிக்க முயன்றபோது அதன் கழுத்துப் பகுதி கம்பியில் இறுக்கப்பட்டதால் மூச்சுத்திணறி சிறுத்தை உயிரிழந்திருப்பதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், தோட்ட நிர்வாகம் ஊடாக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பொகவந்தலாவை காவல்துறையினர், தேயிலைத் தோட்டத்தின் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த மேலும் பல கம்பிப் பொறிகளைக் கண்டறிந்து அவற்றை அகற்றியுள்ளனர்.

உயிரிழந்த சிறுத்தையின் உடல் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், மேலதிக பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல கால்நடை மருத்துவ அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இந்தப் பொறிகளை வைத்த சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொகவந்தலாவை காவல்துறையினரின் உதவியுடன் வனஜீவராசிகள் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All