Search

Rebecca

Jan 15, 2026

உள்ளூர்

மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி சிறிநாத், சிறிநேசன், கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் போது, குறித்த அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கூட்டத்தில் பங்கேற்க வந்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கடும் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக, ஊடகவியலாளர்களுக்கு இறுதியில் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், ஆணையாளர்கள், செயலாளர்கள், பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் பல்வேறு திணைக்களங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All