
admin
May 15, 2026
உள்ளூர்
மாதாந்த சபை அமர்வு அறிக்கையை நிறைவேற்ற முடியாமை காரணமாக தற்காலிக தடை!

மாதாந்த சபை அமர்வு அறிக்கையை நிறைவேற்றிக் கொள்ள முடியாமை காரணமாக, தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் மாதாந்தக் கூட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்க அதன் தலைவர் அசோக கருணாரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன் தலைவரின் தலைமையில் நேற்று (14) சபை கூடியதையடுத்து, கடந்த மாதாந்தக் கூட்டத்தின் அறிக்கை சபை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது.
அந்தச் சந்தர்ப்பத்தில், அதன் உப தலைவர் உட்பட நகர சபை உறுப்பினர்களான அழகமுத்து நந்தகுமார், எஸ். லோகேஸ்வரன், ஜெய்சான், பிரபாகர், பி.கே. தர்மப்பிரிய ஆகியோர் இந்த அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் பிழைகள் உள்ளதாகச் சுட்டிக்காட்டினர்.
இதற்கு முன்னரும் மாதாந்தக் கூட்ட அறிக்கைகளில் பிழைகள் இருந்ததாகவும், இவ்வாறான நிலைமைகள் தொடர்வதற்கு இடமளிக்க முடியாது எனவும் அந்த உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக அழகமுத்து நந்தகுமார் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைய, அந்த மாதாந்தக் கூட்டம் குழுநிலைக் கூட்டமாக மாற்றப்பட்டு, நிலவும் குறைபாடுகள் மற்றும் பிழைகள் குறித்துத் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவரது வேண்டுகோளுக்கு இணங்க தலைவர் உட்பட 15 நகர சபை உறுப்பினர்களும் தனியானதொரு இடத்திற்குச் சென்று கலந்துரையாட நடவடிக்கை எடுத்தனர்.
அந்தக் கலந்துரையாடலின் பின்னர் மாதாந்தக் கூட்டம் மீண்டும் ஆரம்பமானது.
இதன்போது, கடந்த மாதாந்தக் கூட்ட அறிக்கையிலுள்ள குறைபாடுகள் மற்றும் பிழைகள் குறித்து இன்று (15) நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் எழுத்துப்பூர்வமாகத் தெரியப்படுத்துமாறு தலைவர் அசோக கருணாரத்ன அனைத்து நகர சபை உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டார்.
அதன்பின்னர், மாதாந்தக் கூட்டம் இந்த மாதம் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





