
admin
Apr 15, 2026
உள்ளூர்
எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கையின் உள்நாட்டு எரிபொருள் கையிருப்பினை வலுப்படுத்தும் நோக்கில், 36,700 மெற்றிக் தொன் 'ஒக்டேன் 92' ரக பெற்றோலை ஏற்றிய கப்பல் இன்று (15) நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, இந்தியாவிலிருந்து இந்த பெற்றோல் கையிருப்பு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக எரிபொருள் விநியோகத்தைச் சீராகப் பேணுவதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இது பார்க்கப்படுகிறது.
வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிபொருளைத் தரையிறக்கும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
தரையிறக்கும் பணிகள் நிறைவடைந்ததும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குப் பெற்றோலை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கையிருப்பு கிடைக்கப்பெற்றதன் மூலம், சந்தையில் 'ஒக்டேன் 92' ரக பெற்றோலுக்கான தட்டுப்பாடு நீங்கி விநியோகம் மேலும் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு மற்றும் கையிருப்பு நிலைவரங்கள் குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





