Search

admin

Jul 18, 2026

உள்ளூர்

பெண்களை வலுப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரமும் வலுப்படும் – ஹரிணி அமரசூரிய.

2026 ஜூலை 17ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற, இலங்கை பெண் தொழில்முனைவோர் சபையினால் (Ceylon Chamber of Women Entrepreneurs - CCWE) ஏற்பாடு செய்யப்பட்ட CCWE Fashion Week & International Summit 2026 நிகழ்வின் ஆரம்ப விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

"Threads of Inclusion – Woven from Every Walk of Life" எனும் தலைப்பின் கீழ் 2026 ஜூலை 16 முதல் 19 வரை நடத்தப்படும் இந்த CCWE Fashion Week & International Summit 2026 , Fashion துறையில் பெண்களின் பங்களிப்பு, பெண் வலுவூட்டல், தொழில்முனைவோர் திறன் மற்றும் சமூக மாற்றம் ஆகியவற்றிற்கானதொரு தளத்தையும் உரையாடலையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெற்காசியா முழுவதிலுமிருந்தும் பெண் தொழில்முனைவோர், Fashion வடிவமைப்பாளர்கள், படைப்பாளிகள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர், இந்த மாநாட்டின் மூலம் புத்தாக்கம், தலைமைத்துவம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், பெண்களை வலுவூட்டும் வர்த்தகங்களை மேம்படுத்துவதற்கும், புதிய சந்தை வாய்ப்புகளுக்கான அணுகலை அதிகரிப்பதற்கும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர்,

Fashion என்பது பெண்களின் பன்முகத்தன்மையையும் அவர்களின் தனித்துவத்தையும் பிரதிபலிக்கும் ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாட்டு ஊடகமாகும் என்றும், அதேபோன்று, பெண்கள் மீது சமூகத்தினால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் கடுமையான சமூக எதிர்பார்ப்புகளும் இந்த Fashion ஊடாகப் பிரதிபலிக்கப்படுவதனால், இது சமூக விவாதத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் ஒரு முக்கியமான இடத்தை உருவாக்குகிறது என்றும் குறிப்பிட்டார்.

CCWE Fashion வாரம் மற்றும் சர்வதேச மாநாடு போன்ற திட்டங்கள் மூலம் பாரம்பரிய எல்லைகளுக்குச் சவால் விடுத்து, பெண்களின் பங்களிப்பிற்கு நீண்டகாலமாக முட்டுக்கட்டையாக இருந்த தடைகளைத் தகர்த்து, பெண்களின் திறமைகளை இனங்காண்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் அவர்களை வலுவூட்டுவதற்குமானதொரு இடத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் இங்கு வலியுறுத்தினார்.

அத்தோடு, பெண்களை வலுவூட்டுதல் மூலமாக பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இலங்கையின் பல நுண் மற்றும் சிறு கைத்தொழில் துறைகளின் முதன்மை உந்துசக்தியாகப் பெண்களே விளங்குகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் இலங்கை பெண் தொழில்முனைவோர் சபையின் தலைவி கலாநிதி அயந்தி குருசிங்க, அச்சபையின் உறுப்பினர்கள், தெற்காசியா முழுவதிலுமிருந்தும் வருகை தந்த பெண் தொழில்முனைவோர், Fashion வடிவமைப்பாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All