
admin
May 25, 2026
உள்ளூர்
தரமற்ற இலக்கத் தகடுகள் பயன்படுத்தினால் அபராதம்!

உத்தியோகபூர்வ வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் தாமதம் நிலவினாலும், தர நிர்ணயமற்ற அல்லது மாற்றியமைக்கப்பட்ட இலக்கத் தகடுகளைப் பொருத்தி வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. செனவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
தகுதியற்ற இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வழிகாட்டுதலுக்கு அமைய, வாகனத்தின் இலக்கத்தை 'A4' அளவிலான காகிதத்தில் அச்சிட்டுத் தெளிவாகக் காட்சிப்படுத்த சாரதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விநியோகஸ்தர் ஒருவர் இல்லாத காரணத்தினால், கடந்த 10 மாதங்களாக வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தமையால் 400,000 இலக்கத் தகடுகள் தேங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக இலக்கத் தகடுகளை வழங்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உத்தியோகபூர்வமற்ற இலக்கத் தகடுகளைக் காட்சிப்படுத்தும் வாகனங்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதிப்பது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே, அங்கீகரிக்கப்பட்ட தரங்களைப் பூர்த்தி செய்யாத இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு எதிராகத் தொடர்ந்தும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. செனவிரத்ன மீண்டும் எச்சரித்துள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






