
Rebecca
Jan 4, 2026
உள்ளூர்
பிரபல போதைப்பொருள் வியாபாரிக்கு 5 நாட்கள் தடுப்புக்காவல்

அதிகளவான போதைப்பொருட்களை இளைஞர்கள் மாணவர்களுக்கு விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம்; திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கல்முனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பெரிய நீலாவணை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதலில் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி 30 கிராம் ஹெரோயின் மற்றும் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதானார். இச் சந்தேக நபர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் குற்றச்சாட்டின் அடிப்படையில் சாய்ந்தமருது பொதுச்சந்தை மாடியில் கைது செய்யப்பட்டவராவார்.
குறித்த சந்தேகநபர் அண்மைக்காலமாக இளைஞர்கள் மாணவர்களுக்கு அதிகளவான போதைப்பொருட்களை மருதமுனை பகுதியில் விநியோகித்து வந்த நிலையில் இரகசிய தகவல் ஒன்றினை தொடர்ந்து கைதானமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கைதான 44 வயதுடைய சந்தேக நபரை சனிக்கிழமை(3) கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆந்திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை னு.ஊ.னு.டீ என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்காக போதைப்பொருள் ஒழிப்பு கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளதுடன் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பி.கஜேந்திரன் வழிகாட்டுதலில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






