
Rebecca
Feb 4, 2026
உள்ளூர்
மட்டக்களப்பில் கரிநாள் ஆர்ப்பாட்ட பேரணி தடுத்து நிறுத்தம் : பொலிஸாருடன் முறுகல்

ஒரு போராட்டாம் சுதந்திரமாக நடாத்த முடியாத எங்களுக்கு இந்த நாட்டில் ஒவ்வொரு தேசிய சுதந்திர தினமும் கரிநாள்தான் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கரிநாளாக பிரகடனப்படுத்தி பல்வேறு தடைகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து மட்டக்களப்பு காந்தி பூங்காவரையில் ஊர்வலம் செல்ல ஆயத்தமான நிலையில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு ஊர்வலத்தினை தடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும், காந்திபூங்காவில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறுவதன் காரணமாக அங்கு செல்ல முடியாது என பொலிஸார் தடைகளை ஏற்படுத்தினர்.
எனினும் தமது போராட்டம் வழமையாக காந்தி பூங்காவில் நிறைவடைவதனால் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு காணாமல் போனவர்களின் உறவினர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டன.
எனினும் அங்கு செல்வதற்கு அனுமதிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்த நிலையில் கல்லடி பாலத்தில் ஆரம்பித்து தனியார் பஸ் நிலையத்தில் போராட்டத்தினை முடிப்பது என பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து போராட்டம் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களிலிருந்து வருகைதந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உறவினர்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.






Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






