
Rebecca
Jan 11, 2026
உள்ளூர்
தித்வா புயலனர்த்த மண்சரிவுகளால் உயிரிழந்தவர்களும் தியாகிகளே!

அனர்த்ததினால் இலங்கையில் நடந்த மரணங்களில் 25% வை மலையகத் தோட்டப் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன என்பது கவனத்துக்குரியது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
நுவரெலியா நகர மத்தியில் அமைந்த மலையத் தியாகிகள் நினைவுத் தூபி முன்றலில் நேற்று காலை மலையகத் தியாகிகள் தின நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.இராஜாராம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,
மலையக தியாகிகள் நினைவாக நுவரெலியா நகரில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத்தூபி எமது முயற்சியால் இந்த இடத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த நாட்டுக்காக உழைத்த மக்களுக்கு நன்றிக் கடனாக இலங்கை அரசே இத்தகைய நினைவுத்தூபியை அமைத்திருக்க வேண்டும்.
ஆனால் இலங்கையில் தொடர்ந்தும் அரசால், அரசாங்கங்களால் பாராமுகமாக நடாத்தப்படும் மக்களாகவே இருநூறு வருடங்களாக வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய தியாகிகளின் நினைவேந்தல் நாட்டுக்கும் உலகுக்கும் மலையக மக்கள் என்போர் யார்? அவர்களின் உழைப்பின் பெறுமதி என்ன எத்தகைய பங்களிப்புகளை நாட்டுக்காக செய்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது என தெரிவித்தார் .
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா கருத்துத் தெரிவிக்கையில்,
பத்துச்சத சம்பள உயர்வுக்காக போராடி உயிர்நீத்த தோட்டத் தொழிலாளியும் முதல் தியாகியுமான முல்லோயா கோவிந்தன் உயிர்நீத்த ஜனவரி 10ஆம் திகதியன்று இதுவரை மலையகப் போராட்டத் தியாகிகள் அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செய்கின்றோம். சம்பள உயர்வுக்காக மட்டுமன்றி தொழிற்சங்க உரிமை, காணி உரிமை போராட்டங்களில் உயிர்நீத்தவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குகின்றனர்.
அண்மையில் இடம்பெற்ற தித்வா சூறாவளியுடனான மண்ணில் புதையுண்ட 127 மலையக லயன் குடியிருப்பாளர்களும் கூட மலையகத் தியாகிகளாக நினைவு கூரப்படவேண்டியவர்கள் தான்.
ஏனேனில் இவர்களது மரணம் இயற்கையானது அல்ல. இவர்களது வாழ்விடங்களை இவர்கள் தெரிவு செய்யவில்லை. அவர்களின் உழைப்பை உரிஞ்சுவதற்காக அவர்களது உயிர்களின் மதிப்பைக் கருதாது பாதுகாப்பற்ற வாழ்விடங்களில் வாழவைக்கப்பட்டதே இவர்களின் மரணத்துக்குக் காரணமாகும்.
இந்த அனர்த்ததினால் இலங்கையில் நடந்த மரணங்களில் 25%வை மலையகத் தோட்டப் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன என்பது கவனத்துக்குரியது.
இவர்களின் இந்த மரணமும் அதனைத் தொடர்ந்த மக்கள் எழுச்சியும் என்றுமில்லாத வகையில் மலையகத்தில் நிலத்துக்கும் நினைவுக்குமான உரிமைக் கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளது. இந்த 127 உயிர்களின் தியாகம் இந்த எழுச்சிக்கு காரணமாகியுள்ளது என்ற அடிப்படையில் இவர்களையும் கூட மலையக தியாகிகளாக நினைவுகூர வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






