Mar 4, 2026
உள்ளூர்
பிரதமருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

கல்வித் துறைக்கான மனிதவள மேம்பாட்டுத் திட்டம் குறித்துக் கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்று, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகளுக்கும் இடையில் மார்ச் மாதம் 2ஆம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது, சிரேஷ்ட இரண்டாம் நிலைக் கல்வியின் தரம் மற்றும் பொருத்தப்பாட்டை மேம்படுத்துதல், ஆசிரிய குழாமின் தரத்தை உயர்த்துதல் மற்றும் கல்வித் துறை நிர்வாகத் திட்டத்தைச் செம்மைப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டில், தொழில்நுட்பத் திறன் மற்றும் தேர்ச்சிமிக்க மனித வளங்களின் அவசியத்தைப் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார். ஒட்டுமொத்தக் கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்தியிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் தேசிய அபிவிருத்தியின் அனைத்துத் துறைகளையும் முன்னோக்கி இட்டுச் செல்லக்கூடிய பலமான மனித மூலதனத்தைக் கட்டியெழுப்புவதே இதன் இறுதி இலக்காகும் எனச் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் முன்னெடுத்து வரும் கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கான தமது அர்ப்பணிப்பை ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினர். இத்துறைசார் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கவும், சர்வதேச நிதி வசதிகள் ஊடாக ஒத்துழைப்புகளை நீடிக்கவும் தாம் தயாராக இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இச்சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ ஆகியோர் கலந்துகொண்டனர்.



Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






