Search

janani

Jun 8, 2026

உள்ளூர்

14 மாவட்டங்களில் டெங்கு அபாயம் அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வரும் நிலையில், 14 மாவட்டங்கள் அதிக ஆபத்து வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் கபில கன்னங்கார தெரிவித்துள்ளார்.

அதிக ஆபத்துக்குள்ளாக உள்ள 72 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வீடுகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் டெங்கு நுளம்பு பெருகும் சூழல்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளின் பணிகளுக்கு தடையாக செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, ஜூன் 5 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டில் 36,168 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதேவேளை, இந்த ஆண்டில் மட்டும் மூன்று சிறுவர்கள் உட்பட 20 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களை அகற்றுவதுடன், டெங்கு நுளம்பு பெருகும் சூழல்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All