Search

admin

Jul 13, 2026

உள்ளூர்

ஓய்வு வயதை அதிகரிக்க கோரிக்கைகள்!

ஓய்வுபெறும் வயதை மாற்றுவது தொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் கிடைத்து வருவதாகவும், இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

நேற்று (12) இடம்பெற்ற மீரிகம வைத்தியசாலையின் சிறுநீரகக் கற்களை அகற்றும் புதிய சிகிச்சை பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

பல்வேறு தொழில் வல்லுநர்களால் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கமைவாக இந்தக் கோரிக்கைகளை பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் அங்கு தெரிவித்தார். 

அங்கு கருத்துத் தெரிவித்த சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, 

ஏற்கனவே பல்வேறு தரப்பு தொழில் வல்லுநர்களிடமிருந்தும் கோரிக்கைகள் கிடைத்துள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றத்தில் மாத்திரமன்றி சுகாதார சேவையில் உள்ள சில தொழில் வல்லுநர்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. 

சிறைச்சாலைகள் திணைக்களத்திலிருந்தும் கோரிக்கைகள் உள்ளன. ஏனைய சில தொழில் வல்லுநர்கள் தங்களால் மேலும் சிறிது காலம் பணியாற்ற முடியும் எனத் தெரிவித்து, இந்த ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான யோசனையொன்றை முன்வைத்துள்ளனர். 

சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். ஆனால் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் அந்தக் கோரிக்கைகளை நாம் பரிசீலித்து வருகிறோம் என்றார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All