
Rebecca
Dec 26, 2025
உள்ளூர்
மறைந்த ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கான நீதி வேண்டும்! - சாணக்கியன் எம்.பி

தமிழரசுக் கட்சியின் மறைந்த மாமனிதர் மாண்புமிகு ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்றாகும்.
அவரின் இழப்பு எமக்கும் மக்களுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் ஓர் பேரிழப்பாகும். வழமைபோல் இன்றைய தினமும் தமிழரசுக் கட்சியினரால் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
நீண்ட காலத்துக்கு பின்னர் இலங்கை வந்த அவரது மகனின் வேண்டுகோளுக்கு அமைய அவரது நீதி கோரும் வழக்கினை மீள எடுத்துக் கொள்ளப்பட்டு அதற்கான நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய எமது கட்சியின் பதில் பொது செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அவர்களினால் சட்டமா அதிபருக்கு பல மாதங்களுக்கு முன் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அத்துடன் இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் நேரடியாக நீண்டகாலமாக பாராளுமன்றத்தில் 3 தடவைக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களால் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
ஆனால் இன்றளவிலும் இதற்கான நடவடிக்கையை இவ் அரசு மேற்கொள்ளவில்லை. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்.
ஜனாதிபதிக்கு எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் அனுப்பப்பட்ட கடிதம் பின்வருமாறு,
"மாண்புமிகு ஜோசப் பரராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கொலை குற்றம் சாட்டப்பட்டவர் – சிவனேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு உயர் நீதிமன்ற வழக்கு இலக்கம்: HCD/3057/17
மரணமடைந்த மாண்புமிகு ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் மகனான திரு. டேவிட் ஜோசப் அவர்களின் சட்ட ஆலோசகராக நான் இக்கடிதத்தை எழுதுகிறேன்.
மேற்குறிப்பிட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுள் திரு. சிவனேசத்துரை சந்திரகாந்தன் உட்பட அனைவருக்கும் எதிரான குற்றப்பத்திரிகையை சட்ட மா அதிபர் வாபஸ் பெற்றதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். வழக்கு தள்ளுபடி செய்யப்படும் முன், குற்றம் சாட்டப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் நான் நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தேன்.
தற்போது, மாண்புமிகு ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் மகன், தந்தையின் கொலை வழக்கை மீண்டும் திறந்து விசாரணை நடத்துமாறு உங்களிடம் பிரதிநிதித்துவம் செய்யுமாறு எனக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நீங்கள் அறிந்ததுபோல், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், தேவாலயத்திற்குள் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியின் போது மாண்புமிகு ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் கொலை செய்யப்பட்டார். ஆனால் மேற்கண்ட முறையில் வழக்கு கைவிடப்பட்டதன் பின்னர், அவரது கொலைக்காக இதுவரை எவரும் வழக்குத் தொடரப்பட்டதுமில்லை, தண்டனை பெற்றதுமில்லை.
இவ்விண்ணப்பத்திற்கு தங்களின் விரைவான பதிலை எதிர்பார்க்கின்றேன்." என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






