Search

admin

Jul 15, 2026

உள்ளூர்

மேயர் பதவி நீக்க வர்த்தமானிக்கு நீதிமன்றத் தடையுத்தரவு நீடிப்பு!

வவுனியா மாநகர சபை முதல்வரைப் பதவியிலிருந்து நீக்கி ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது. 

வவுனியா மாநகர சபை முதல்வரின் பதவிகளை நீக்கி மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு, வவுனியா மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, வழக்கின் பிரதிவாதிகளான மாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி தமது சமர்ப்பணங்களை முன்வைத்தார். 

பிரதிவாதிகளின் ஆட்சேபனை பதில்களைத் நீதிமன்றுக்கு தெரிவிப்பதற்கு ,மேலதிக கால அவகாசம் வழங்க வேண்டும் என அவர் கோரினார். 

இதற்கு மனுதாரர் தரப்பு எவ்வித ஆட்சேபனைகளையும் தெரிவிக்கவில்லை. 

அத்துடன், கடந்த 3ஆம் திகதி மனுதாரருக்குச் சாதகமாக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை தாம் கடுமையாக எதிர்க்கப் போவதாகவும் அரச சட்டவாதி இதன்போது சுட்டிக்காட்டினார். 

இதனை பரிசீலித்த நீதிமன்றம், பிரதிவாதிகளான ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரது ஆட்சேபனைப் பதில்களை இம் மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

அத்துடன் மாநகர முதல்வரைப் பதவியிலிருந்து நீக்கிய ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக கடந்த மூன்றாம் திகதி விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை நீடித்து நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது. 

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All