
Rebecca
Feb 18, 2026
உள்ளூர்
அக்குரேகொட இரட்டை கொலை - ஆதாரங்களை அழித்த சந்தேகநபர்கள்

அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவத்தின் பின்னர், சந்தேகநபர்கள் தமது கைபேசிகளிலுள்ள தரவுகளை அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (18) கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் தலங்கம, அக்குரேகொட பகுதியில் வைத்து இந்தச் சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 12 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், கொலையாளிகள் பயன்படுத்திய துப்பாக்கிகளைக் கடத்திச் சென்ற இரண்டு சகோதரர்கள் கடந்த 16ஆம் திகதி பிற்பகல் கொட்டாவை பகுதியில் வைத்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அவ்விருவரும் நேற்று (17) கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை இன்று வரையில் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்று (17) பிற்பகல் பொல்கஸ்ஓவிட்ட பகுதியில் வைத்து 'பொல்கஸ்ஓவிட்ட டிலா' என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது ஆலோசனையின் பேரிலேயே குறித்த இரு இளைஞர்களும் துப்பாக்கிகளைக் விநியோகித்துள்ளமையும், அதற்கு 'டிலா' என்பவரும் ஒத்துழைத்துள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






