Search

Rebecca

Feb 6, 2026

உள்ளூர்

யாழில்.பொது இடங்களில் எரியூட்டல் இடம்பெற்றால் நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் திறந்த வெளியிடங்களில் எரியூட்டல் இடம்பெற்றால் 0112587124 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் உடனடியாக சுற்றாடல் பொலிஸாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சுற்றாடல் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட சுற்றாடல் குழு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய மாவட்ட செயலர்,

யாழ்ப்பாணத்தில் திண்மக்கழிவகற்றல் பொறிமுறை சிறப்பாக இருத்தல் வேண்டும். அதற்கு பொதுமக்களின் விழிப்புணர்வு செயற்பாடுகள்ம் மிக முக்கியம். குப்பைகளை வீதிகளில் பொறுப்பற்ற முறையில் வீசுபவர்களை கண்காணிப்பதற்கு - உள்ளூராட்சி மன்றங்கள் கண்காணிப்பு கமராக்களை பூட்டி அவதானிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதேச செயலகங்களில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் சுற்றாடலுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் இருப்பதனால் உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த செயற்பாடுகளை பிரதேச செயலாளர்கள் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து குறித்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அவையாவன

1.யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் திண்மக் கழிவுகள் தொடர்பாக பொதுமக்களுக்கான போதியளவு விழிப்புணர்வு இருப்பதனால் கழிவுகளை தரம்பிரித்து சேகரிக்க வேண்டும்.

2.யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அரச, தனியார் நிறுவன திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வழங்குமாறும், மார்ச் முதலாம் திகதியிலிருந்து உள்ளுர் அதிகார சபையினால் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து சேகரிக்கப்படும்.

3.ஏதாவது திறந்த வெளியிடங்களில் எரியூட்டல் இடம்பெற்றால் 0112587124 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் உடனடியாக சுற்றாடல் பொலிஸாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

4.ஒலிபெருக்கியின் பாவனையால் அதிகப்படியான இடையூறு ஏற்படின், குறித்த பிரதேச கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் குறித்த விடயம் தொடர்பாக பிரதேச செயலாளருக்கு தகவல்களை வழங்குவதன் ஊடாக பிரதேச செயலாளர்கள் அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

5.பொதுமக்கள் வளி மாசடைதல் தொடர்பாக WWW.CA.AQ.LK என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

6.டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக ஏனைய வருடங்களுடன் ஒப்பிடும் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ச்சியான கண்காணிப்புக்களை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மாநகர முதல்வர், பிரதேச சபையின் தவிசாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை வைத்திய அதிகாரி, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உதவி ஆணையாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அகழ்வுப் பொறியியலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All