Search

admin

Jun 11, 2026

உள்ளூர்

இலங்கை - ஜப்பான் கல்வி உறவுகளை வலுப்படுத்தும் புதிய முயற்சி.

2026 ஜூன் 11 இடம்பெற்ற, புதிய சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலையத்தைத் திறந்துவைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

கொழும்பு 07, வார்ட் பிளேஸ், இலக்கம் 85 என்ற முகவரியில் சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலைய அறக்கட்டளையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கலாசார நிலையம், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கலாசாரப் பரிமாற்றம், கல்வி, தொழில்சார் பயிற்சி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் முக்கிய மையமாகச் செயற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

நிகழ்வின்போது, சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலையம் திறந்து வைக்கப்பட்டதைக் குறிக்கும் நினைவுப் பலகையை பிரதமர் திரைநீக்கம் செய்துவைத்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் நிப்பான் அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் யோஹேய் சசகாவா ஆகியோரின் முன்னிலையில், பாதுகாப்பு அமைச்சிற்கும் சசகாவா அமைதி அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவு நீண்டகால கலாசார மற்றும் ஆன்மீகத் தொடர்புகளால் செழுமையடைந்திருக்கின்றது. இயற்கை, கலாசாரம், கல்வி மற்றும் சமூக விழுமியங்களை மதிப்பதில் இரு நாட்டு மக்களும் ஆழமான பிணைப்பைக் கொண்டிருக்கின்றனர்.

ஜப்பானிய மொழிக் கல்வியை மேம்படுத்துவதிலும், இலங்கை-ஜப்பான் மக்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதிலும் சசகாவா நிலையம் ஆற்றி வரும் பணி அளப்பரியது. புதிய நிலையம் கலாசாரப் பரிமாற்றம் மற்றும் கல்வி ஒத்துழைப்பிற்கான ஒரு சிறந்த தளமாக அமையும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது.

உலகளாவிய நிச்சயமற்ற சூழல் நிலவும் இக்காலகட்டத்தில்,பரஸ்பர மரியாதை மற்றும் சமாதானத்திற்கான அர்ப்பணிப்புடன் கூடிய கூட்டுறவானது முன்னெப்போதையும் விட மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. அமைதி, செழுமை மற்றும் மானிட கௌரவத்தை ஊக்குவிக்கும் சர்வதேச ஒழுங்கிற்காகவும், சர்வதேச ஒத்துழைப்பிற்காகவும் இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தொடர்ந்து உறுதிபூண்டிருக்கின்றன, எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அக்கியோ இசொமடா, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி, ஜப்பான் நிப்பான் அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் யோஹேய் சசகாவா , சசகாவா நிலைய அறக்கட்டளையின் தலைவர் பிரேமலால் பெர்னாண்டோ ஆகியோர் உள்ளிட்ட இராஜதந்திரப் பிரதிநிதிகளும் கௌரவ அதிதிகளும் கலந்துகொண்டனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All