
admin
Jun 1, 2026
உள்ளூர்
அறிவின் ஆலயம் எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள்!

தமிழர்களின் வரலாற்று சாட்சியங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் 45 வருடங்கள் நிறைவடைகின்றன.
1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில், ஆசியாவின் மிகப் புகழ்பெற்ற நூலகங்களில் ஒன்றாக விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
சுமார் 97 ஆயிரத்திற்கும் அதிகமான அரிய நூல்கள், ஓலைச்சுவடிகள், வரலாற்றுச் சான்றுகள், பழமையான கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட தமிழர் அறிவுப் பாரம்பரியத்தின் பெறுமதிமிக்க பொக்கிஷங்கள் அந்தத் தீயில் சாம்பலாகின.
அந்த இரவு எரிந்தது ஒரு கட்டிடம் மட்டுமல்ல, ஒரு இனத்தின் அறிவுச் செல்வமும், பண்பாட்டு நினைவுகளும், வரலாற்று அடையாளங்களும் ஆகும் எனப் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
45 ஆண்டுகள் கடந்த போதிலும், அந்தத் துயரச் சம்பவத்தின் நினைவுகள் இன்னும் தமிழர் மனங்களில் அழியாத வடுக்களாகத் தொடர்கின்றன.
உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள், கருத்தரங்குகள் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகள் மூலம் அந்த வரலாற்று இழப்பை நினைவுகூருகின்றனர்.
அறிவை அழிக்க முடியும் ஆனால் அறிவுக்கான தாகத்தையும் ஒரு மக்களின் நினைவுகளையும் அழிக்க முடியாது என்பதற்கு யாழ்ப்பாணம் பொது நூலகம் இன்று மீண்டும் கம்பீரமாக எழுந்து நிற்பது சாட்சியாக உள்ளது.
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடையும் இந்த நாளில், அறிவு, பண்பாடு மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உலகம் நினைவுகூர்கிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






