Search

admin

Jun 28, 2026

உள்ளூர்

பொசன் பாதுகாப்புக்கு 10,000 காவல்துறையினர் களத்தில்! முக்கிய அறிவிப்பு

பொசன் பண்டிகை காலப்பகுதியில் நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர், இந்த ஆண்டில் இதுவரை சுமார் 75 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், எனவே நீர்நிலைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொசன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, சுமார் 10,000 காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீர்நிலைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் இடையூறுகளைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஆறுகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்குச் செல்லும் போது எச்சரிக்கைப் பலகைகளைப் பின்பற்றுமாறும், உயிர்காக்கும் காவல்துறை குழுவினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் அல்லது மது அருந்திவிட்டு நீரில் இறங்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான இடங்களில் சிவில் உடையில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர்.

இதனிடையே, உந்துருளிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் மாற்றங்களைச் செய்து அதிக சத்தத்தை உண்டாக்கும் வாகனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கிறது.

குறிப்பாக, மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் மற்றும் அதிக சத்தமிடும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

உந்துருளிகளில் பயணிப்போர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்போர் கட்டாயம் பாதுகாப்புத் தலைக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறின்றி பயணிப்போர் மீதும், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீதும் வழக்குத் தொடரப்படும்.

பொசன் பண்டிகைக்காகப் பயணம் மேற்கொள்ளும் போது, முதியவர்களைத் தனியாக வீட்டில் விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றச் செயல்களுக்கு இலக்காகக்கூடும் என்பதால், வீட்டின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பண்டிகையைக் கொண்டாடி, சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொள்வதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All